கடலூரில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் நகராட்சியில் தரமற்ற குடிநீர் விநியோகம், எரியாத தெரு விளக்குகள், புதைசாக் கடைத் திட்டத்தால் சாலைகளில் பாதிப்பு, ஆணையர் இல்லாமல் இயங்கும் நகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படாத கெடிலம் கரையோர சாலை, புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் மெத்தனம், நத்தவெளி சாலை பணிகளில் மந்தம், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே சட்டையில் கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு.ராமலிங்கம், எம்.சுப்புராயன், எஸ்,என்.கே.ரவி, கே.சிவாஜிகணேசன் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் எம்.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலர் சு.திருமாறன் ஆகியோர் சிறப்புரையும், சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன் விளக்க உரையும் நிகழ்த்தினர்.
நிர்வாகிகள் டி.துரைவேலு, எம்.கார்த்திகேயன், பேராசிரியர் அ.அர்த்தநாரி, சிவ.ரவிச்சந்திரன், எஸ்.சையதுமுஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.