வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.13.16 லட்சம் பெறப்பட்டது.
இதில், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், ஞான சபையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.4,34,487 காணிக்கை இருந்தது. இதேபோல, தரும சாலை உண்டியலில் ரூ.5,12,040, மேட்டுக்குப்பம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.3,69,658 இருந்தது. மொத்தம் ரூ.13,16,185 காணிக்கை கிடைத்தது.
இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில், பண்ருட்டி ஆய்வாளர் ஜெயசித்ரா, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் முன்னிலையில் வங்கி ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.