தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்களது கரும்புகளை எ.சித்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அரைவைக்கு வழங்குகின்றனர். ஆனால், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லையாம். மேலும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடனும் பெற்றுள்ளதாம். இந்தக் கடன் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டுமென வங்கிகள் வலியுறுத்தி வருவதால், விவசாயிகளால் வேறு கடன்களையும் பெற முடியவில்லையாம்.
எனவே, கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் எனக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டம் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. அப்போது, பாடை, சடலம் மாதிரிகளுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், தங்களது போராட்டம் தொடருமென போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.