சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில், "வெனாமி' எனப்படும் வெள்ளை நிற இறால் ரசாயனக் கலப்பின்றி பசுமை வேளாண்மை முறையில் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இழுவலை மூலமாக அறுவடை செய்யப்பட்டதில் சுமார் 120 கிலோ இறால் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து புல முதல்வர்
மு.சீனிவாசன் கூறுகையில், கடந்த 24.9.2018 அன்று இறால் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டு மண் வளத்தை சுண்ணாம்பு மூலம் பதப்படுத்தி 60 செ.மீ. வெள்ளார் (கடல் நீரை) நிரப்பி 109 நாள்கள் உணவு, தண்ணீர் திறம் மேம்படுத்தி எங்களிடம் பயிலும் மாணவர்களே களத்தில் இறங்கி இறால் வளர்ப்பில் திறமையாக செயல்பட்டனர் என்றார்.
இதுகுறித்து துணைவேந்தர் வி.முருகேசன் கூறுகையில், மாணவர்கள் படிக்கும்போதே சுயதொழில் மேற்கொள்ளும் நம்பிக்கையை இறால் வளர்ப்பு பயிற்சி ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும், இந்த மையத்தில் சமத்துவ பொங்கலை விழாவை துணைவேந்தர் தொடக்கி
வைத்தார்.