நெய்வேலியில் என்எல்சி நிறுவன பெண் அதிகாரியை மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நெய்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
நெய்வேலி வட்டம்-7, டைப்-2 குடியிருப்பில் வசிப்பவர் நீலிமா மூர்மு. நெய்வேலி சுரங்கம் 1-இல் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 14.4.2014 அன்று மர்ம நபர் "ஏசி' இயந்திரம் பொருத்த வந்ததாகக் கூறி அறிமுகம் செய்துகொண்டார். பின்னர் அந்த நபர் கத்திரிக்கோலை காட்டி மிரட்டி நீலிமா மூர்மு வீட்டிலிருந்த 72 கிராமம் தங்க நகைகள், ரூ.8ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு காரில் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, 16.4.2014 அன்று நெய்வேலியை அடுத்துள்ள சின்னகாப்பான்குளத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் சிவராமன் (37) (படம்) என்பரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெய்வேலி சார்பு-நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த சார்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஸ்ரீராமஜெயம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 451-ன்படி சிவராமனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதேபோல, 392 மற்றும் 397 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.எஸ்.சிவசங்கர் வாதிட்டார்.