மருங்கூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள், அனைத்துக் கட்சியினர் இணைந்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வட்டத்துக்கு உள்பட்ட மருங்கூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை அமைக்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஓரிரு நாள்களில் மதுக் கடையை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து, மதுக் கடை அமையவுள்ளதாகக் கூறப்படும் கட்டடத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், பள்ளி அருகே மதுக் கடை அமைக்கப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
பிரதான சாலை ஓரம் இந்தக் கடை உள்ளதால் மது அருந்தி செல்வோரால் விபத்துக்கள் ஏற்படவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளதால் மதுக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.