அந்த்யோதயா ரயில் கடலூரில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் தில்லியில் ரயில்வே வாரிய டிராபிக் உறுப்பினர் கிரிஷ்பிள்ளையை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு: தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தினமும் அந்த்யோதயா ரயில் (எண்: 16191-16192) இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 9-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் கடலூர் மாவட்டம் வழியாகச் சென்றபோதிலும் மாவட்டத்தில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்பதில்லை. கடலூரைச் சுற்றிலும் பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பு நிலையங்களை தினமும் திரளானோர் பயன்படுத்திவரும் நிலையில், அந்த்யோதயா ரயில் கடலூரில் நிற்காமல் செல்வது மக்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. எனவே, திருப்பாதிரிபுலியூர் அல்லது கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்த்யோதயா ரயில் நின்றுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். மற்றொரு மனுவில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நின்று சென்ற பல்லவன் விரைவு ரயில் (12605-12606), வைகை அதிவிரைவு ரயில் (12635-12636) ஆகிய ரயில்கள் மீண்டும் அங்கு நின்றுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடத்தில் சர்க்கரை, சிமென்ட் ஆலைகளும், கல்வி நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருவதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.