இளைஞர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பெண்ணாடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் பரந்தாமன். இவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், முத்தையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை ராமு, மதுரை சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகளுக்கு 18 வயது நிறைவடையவில்லை என தெரிவித்ததன் பேரில் போக்úஸா சட்டத்தின் கீழ் பரந்தாமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதான பரந்தாமன், பின்னர் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மகாராஷ்டிரம் மாநிலம், புனேயில் தற்கொலை செய்துகொண்டதாக அங்குள்ள போலீஸார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரந்தாமனின் மரணத்தில் ராமுவின் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் பி.வாஞ்சிநாதன், கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.எஸ்.அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலர் பி.முத்துலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகரச் செயலர் வி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.