பெண்ணாடம் அருகே காரை பெயர்ந்து விழுந்த அரசுப் பள்ளி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
பெண்ணாடம் அடுத்துள்ளது நத்திமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளியின் முகப்பு பகுதியில் உள்ள மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்படவில்லை. எனவே, இந்தக் கட்டடத்தை முழுமையாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. தங்களது, நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பள்ளி கட்டடம் இடிக்கப்படுவதால், தற்காலிக கொட்டகை அமைத்து அதில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தை துரிதமாக அமைக்கும் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.