சிதம்பரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சிபிஎஸ்இ பள்ளி, சிதம்பரம் நகர காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்தார். ஷெம்போர்டு பள்ளி முதல்வர் டி.லட்சுமணன் வரவேற்றார். பள்ளி நிறுவனர் ஏ.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நகர காவல் நிலைய ஆய்வாளர் கே.குமார் பேரணியை தொடக்கி வைத்தார். வாகன முகப்பு விளக்குகளில் வில்லையை (ஸ்டிக்கர்) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.முக்கண்ணன் ஓட்டினார். நகர காவல் ஆய்வாளர் கே.குமார் தலைக்கவசம் வழங்கினார். சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. விழிப்புணர்வுப் பேரணி பாரத ஸ்டேட் வங்கி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காந்தி சிலை அருகே முடிந்தது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜெயராமன், வி.ரவிச்சந்திரன், சீனிவாசன், சரவணன், சுனில்குமார் போத்ரா, புகழேந்தி, டி.சி.அருள், ராஜசேகரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஷெம்போர்டு பள்ளிச் செயலர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார் .