பொங்கல் திருநாளை முன்னிட்டு, சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நகராட்சி பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமை வகித்துப் பேசினார். நகராட்சி பொறியாளர் மகாதேவன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், வட்டாட்சியர் ஹரிதாஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லை கோபி, ஒன்றியச் செயலர் அசோகன், எம்.ஆர்.கே.சர்க்கரை ஆலை துணை தலைவர் விநாயகம், ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் (பொறுப்பு) காதர்கான் நன்றி கூறினார்.
விழாவில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் பேசியதாவது: தொகுதி வளர்ச்சி பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழக எம்எல்ஏக்களில் முன்மாதிரியாக திகழ்கிறார் கே.ஏ.பாண்டியன்.
அவரது முயற்சியால் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் , எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி கொண்டுவரப்பட்டது என்றார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, தனது சொந்த செலவில் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு புத்தாடைகளை வழங்கி, மதிய விருந்து அளித்தார். அவர் பேசியதாவது: சிதம்பரம் நகருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக யாத்திரி நிவாஸ் கொண்டுவரப்படும். இங்குள்ள பழைமையான பேருந்து நிலையம் புனரமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.