பண்ருட்டியில் பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், நான்கு முனைச் சந்திப்பில் கேமரா பொருத்தி கண்காணிப்புப் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்ருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பொங்கல் பொருள்கள், ஆடைகள் வாங்குவதற்காக பண்ருட்டி நகருக்கு அதிகளவில் வந்து செல்வர்.
அதனால், பண்ருட்டி நகரின் முக்கிய கடை வீதிகள் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, நகை, பணம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறையினர்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமரா தற்காலிகமாக பொருத்தப்பட்டு கிரேன் மூலம் 4 திசைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இதிலிருந்து பெறப்படும் காட்சிகள் திரையில் கண்காணிக்கப்படுகின்றன.
இதன்மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்களை உடனுக்குடன் பிடிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் பா.பரமேஸ்வரன் பத்மநாபன் கூறியதாவது: பொங்கல் பண்டிகை, ஆற்றுத் திருவிழா சமயங்களில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, "ஜிம்மி-ஜிப்' எனப்படும் கிரேன் மூலம் அதிநவீன வசதி கொண்ட கேமராவை பொருத்தி நான்கு
முனைச் சந்திப்பில் கண்காணித்து
வருகிறோம்.
இதன்மூலம் பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.