கடலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் 998 பேருக்கு வாழ்வாதார உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் மண்பாண்டங்கள் செய்வது கடினம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதார
உதவித் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்கள் தொடர்பாக 2014-15-ஆம் ஆண்டில் கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டதில் 1,008 குடும்பங்கள்
இந்தத் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதில், தற்போதுள்ள
998 குடும்பத்தினருக்கு 2018-19-ஆம் ஆண்டுக்காக, தலா ரூ.5 ஆயிரம் வீதம் மழைக் கால பராமரிப்பு தொகையாக ரூ.49.90 லட்சம் நிதி பயனாளிகளின் வங்கி கணக்குக்கு மின்னணு தொகை பரிமாற்றம் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக நல வாரிய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தலா ரூ.4 ஆயிரம் வீதம் ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா ரூ.40.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது 2017-18-ஆம் நிதியாண்டில் தலா ரூ.5 ஆயிரமாக ஆக உயர்த்தப்பட்டு கடலூர் மாவட்டத்தில் ரூ.50.30 லட்சம் பயனாளிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.