குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு, அனைத்து தனி அலுவலர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம், விவாதிக்கப்படவுள்ள பொருள்கள் பற்றி ஊராட்சி மன்றக் கட்டடத்திலும், சமுதாயக்கூட கட்டடங்களிலும் மக்கள் பார்வையில் தெரியும்படி விளம்பர பலகையில் எழுதி வைக்க வேண்டும். மேலும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு வெளியில் வீசப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்தல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும், கிராம ஊராட்சிகளில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொது நிதியிலிருந்து செய்யப்பட்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பயன்பாடு குறித்து விவாதித்தல் மற்றும் ஊராட்சி மன்றத் தனி அலுவலரால் கொண்டு வரப்படும் இதர பொருள்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.