கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவுப் பொருள்களில் கலப்படத்தைக் கண்டறிவது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி, திருவந்திபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உணவு பொருள்களில் கலப்படம் கண்டறிவது குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நா.தட்சிணாமூர்த்தி முகாமை தொடக்கி வைத்தார். உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சு.ஏழுமலை, ஜெ.கொளஞ்சி ஆகியோர் கலப்பட உணவை கண்டறிதல் குறித்து பயிற்சியளித்தனர்.
முகாமில், தரமற்ற உணவுப் பொருள்களை அடையாளம் காணுதல், செயற்கை சாயம் கலந்த உணவுப் பொருள்கள், உணவுப் பொருள் பொட்டலத்தில் உள்ள அடையாள வில்லை ஆகியவை குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, தரமான உணவுப் பொருள்கள், கலப்பட உணவு பொருள்கள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது. செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 11 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக அளிக்கப்படுகிறது.
வட்டாரம், நகர அளவில் பள்ளியைத் தேர்வு செய்து மற்ற பள்ளிகளிலிருந்து தலா ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் வீதம் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், ஆசிரியர்கள் மூலமாக மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.