பண்ருட்டி அருகே கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்ததில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்குச் சொந்தமான நிலம் ஓறையூரில் உள்ளது. இந்த நிலத்தை ஒறையூரைச் சேர்ந்த காசிநாதன் (60), கரும்பு பயிரிட்டுள்ளார். புதன்கிழமை இவரது கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் வி.மணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது, தீயில் கருகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்தது ஆணா? பெண்ணா? என்று தெரியவில்லை.
கடலூரில் இருந்து சுரேஷ் தலைமையிலான தடய அறிவியல் துறையினர் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது. பின்னர், சடலத்தை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.