சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறையில் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் விந்தணுக்கள் உட்செலுத்தி கருத்தரிக்கும் முறை தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்த முறையில் ஒரு தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் இரட்டை குழந்தைகள் கரு உருவாகியது.
இதையடுத்து, தம்பதிக்கு கடந்த 13.01.2019 அன்று மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண்/ஒரு பெண்) பிறந்தன.
பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்று தாய், சேய் ஆகியோர் பார்வையிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் வழங்கப்படும் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை வழங்கி வாழ்த்தினார்.
மேலும், ஐம்பது தாய்மார்களுக்கும் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கினார்.
பின்னர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.லாவண்யா குமாரி, குழுத் தலைவர்கள் பேராசிரியர்கள் லதா, மல்லிகா மற்றும் துறை பேராசிரியர்கள் 9 பேர் உள்பட முதுநிலை மாணவிகள் 22 பேர் அடங்கிய குழு, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் வே.உ.சண்முகம், மருத்துவ புல முதல்வர் டி.ராஜ்குமார் ஆகியோரையும் பாராட்டினார்.