பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவூடல் நந்தி சிறப்பு அலங்கார தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நந்தீஸ்வரருக்கு திருவூடல் நந்தி சிறப்பு அலங்கார தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு மாட்டுப் பொங்கல் தினமான புதன்கிழமை திருவூடல் அலங்கார தரிசனம் நடைபெற்றது.
இதனையொட்டி மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் பட்சனங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.