தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் புதன்கிழமை தொடங்கியது.
வடலூரில் உள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்வர்.
விழாவை முன்னிட்டு ஜன.13 முதல் 15-ஆம் தேதி வரை தருமச் சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.
தொடர்ந்து 16 முதல் 19-ஆம் தேதி வரையில் ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து 20-ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி ஜோதி தரிசனப் பெருவிழாவும், 23-ஆம் தேதி மேட்டுக்குப்பதில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. காணும் பொங்கல் நாளான வியாழக்கிழமை வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்தனர்.ஞானசபை வளாகத்தில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது.