என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்
என்எல்சி சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கண்டித்து, தென்குத்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது தென்குத்து கிராமம். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-ஏ அருகே அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்காக இங்குள்ள நிலம், வீடுகளை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு தென்குத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக 4.4.2018 அன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனராம்.
இந்த நிலையில், தென்குத்து கிராம மக்கள் தங்களது வீடு, நிலங்களை அவசர தேவைக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ சென்றால் பத்திரப் பதிவுத் துறையில் முடக்கப்பட்டுள்ளதாம். மேலும், மேற்கண்ட கிராமம் நெய்வேலி நகரியம் என்ற பெயரில் உள்ளதாம். எனவே, பத்திரப் பதிவுத் துறையில் உள்ள தடையை நீக்கக் கோரி 19.11.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்தனராம். ஆனால், அந்த மனு மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை
யாம்.
இந்த நிலையில், கடந்த டிச.13-ஆம் தேதி காவல் துறையினரின் உதவியுடன், நிலம் எடுப்புத் துறை அதிகாரிகள் தென்குத்து கிராமப் பகுதியில் ஆய்வு செய்தனராம்.
எனவே, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், என்எல்சி சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்கு தென்குத்து கிராமத்தில் நிலம் கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் அந்த கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். போராட்டத்தில் 200 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.