முன்னாள் படைவீரர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி, கிராம மக்கள் பண்ருட்டி - கடலூர் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வட்டம், ஏ.ஆண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). முன்னாள் படைவீரரான இவர், எம்.புதுப்பாளையம் பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருகிறார். வியாழக்கிழமை இரவு எம்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சில பெண்கள் அந்தப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றனராம். அவர்களை சக்திவேல் திட்டினாராம். இதுகுறித்து அந்தப் பெண்கள் தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த எம்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிலர் திரண்டு வந்து சக்திவேலை தாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஏ.ஆண்டிப்பாளையம் பகுதி மக்கள் சுமார் 150 பேர் திரண்டு வந்து பண்ருட்டி - கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் பண்ருட்டி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துத் தடைபட்டது.
சம்பவம் குறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில், எம்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த வசந்தராஜ், ஜெயவிஷ்ணு, பிரதாப்குமார், மோகன்ராஜ், முருகன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.