இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களில் பணிமாற்றம் செய்வதைக் கண்டித்து, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், எல்.அரிகிருஷ்ணன், கோ.சேரலாதன், ஏ.செல்வநாதன், எம்.அம்பேத்கர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வே.மணிவாசகன், உயர் மட்டக்குழு உறுப்பினர் என்.ஜனார்த்தனன், டிஎன்ஜிபிஏ மாநிலச் செயலர் டி.புருசோத்தமன், உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.சுந்தரராஜா, கோ.பாக்கியராஜ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்காக இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக அங்கன்வாடி மையங்களில் பணிமாற்றம் செய்வதை கண்டிப்பதாகக் கூறி கூட்டமைப்பினர் முழக்கமிட்டனர். 3,500 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கண்டித்தும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஜாக்டோ-ஜியோ நிதிக் காப்பாளர் ஜெ.கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.