முழுநேர அரசு மருத்துவமனை கோரி பொதுநல இயக்கத்தினர் கையெழுத்து இயக்கம்

கடலூர் முதுநகரில் முழுநேர அரசு மருத்துவமனை அமைக்கக் கோரி, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 


கடலூர் முதுநகரில் முழுநேர அரசு மருத்துவமனை அமைக்கக் கோரி, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 
கடலூர் முதுநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி நேரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக தகுதி உயர்த்த வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்ததன. அதன் ஒரு பகுதியாக, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிங்காரத்தோப்பு து.துரைவேலு தலைமை வகித்தார். பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். கையெழுத்து இயக்கத்தின் அவசதியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு.ராமலிங்கம், எஸ்.என்.கே.ரவி, எம்.சுப்புராயன், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கார்த்திகேயன், தர்மராஜ், சாய்ராம், கஞ்சமலை, சண்முகம், தர்மன் குமரன், சுகுமாறன் ஆகியோர் பேசினர். கடலூர் பெருநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், சுமார் 2 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதுகுறித்து து.துரைவேலு கூறியதாவது: முதுநகர், கிளைவ் தெருவில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிங்காரத்தோப்பு, தைக்கால்தோணிதுறை, சோனங்குப்பம், அக்கரைக்கோரி, சலங்குகார கிராமம், பென்சனர் லைன், சுத்துகுளம், சானார்பாளையம், மணக்குப்பம், சாலக்கரை, செல்லங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர். 
இங்கு ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள், மருந்தாளுநர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளனர். கட்டுகட்டுநர் பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக உள்ளது. மருத்துவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 
இங்கு தினமும் வெளிநோயாளியாக சுமார் 200 பேர் சிகிச்சை பெறும் நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய முழு நேர மருத்துவமனையை இந்தப் பகுதியில் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com