ஜன.26,27 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் கமல் சுற்றுப்பயணம்

கடலூர் மாவட்டத்தில் 26, 27-ஆம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்

கடலூர் மாவட்டத்தில் 26, 27-ஆம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கிராம சபைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.
 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தென்மண்டல பொறுப்பாளர் பா.ராஜநாராயணன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் கமலஹாசன் வரும் 26, 27-ஆம் தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
 இதுதொடர்பாக சி.கே.குமரவேல் கூறியதாவது: ஜனநாயகத்தின் முதல் அடுக்கில் கிராமசபை உள்ளது. இதனை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் 3 இடங்களில் கமல் பங்கேற்கிறார். எந்த கிராமங்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மறுநாள் 27-ஆம் தேதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கெளரவிக்கும் வகையில் கட்சியின் சார்பில் சான்றோன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதையும் கமல் வழங்குகிறார் என்றார் அவர்.
 கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் டி.வெங்கடேசன், ஏ.எம்.கே.முகமது ரபீக், எஸ்.சரவணன், மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் ஆ.ஜபர்சன், நகர பொறுப்பாளர் மூர்த்தி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் செந்தில் ஆறுமுகம், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com