தமிழர் பண்பாட்டு மரபுகளை மீட்க வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி கூறினார்.
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எண்ணாநகரம் கிராமத்தில் 14-ஆவது ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா, பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
சங்க உறுப்பினர் விக்னேஷ் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாய மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்க வேண்டும். சாதி, மதங்களைக் கடந்து சமத்துவப் பொங்கலை கொண்டாடுவது என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க இளைஞர் சமுதாயம் உறுதியேற்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலச் செயலர் மூசா, தமிழக விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டச் செயலர் ஜி.மாதவன், மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கலியபெருமாள், கீரை ஒன்றியச் செயலர் வாஞ்சிநாதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணன், தலைவர் லெனின், துணைத் தலைவர் ஆழ்வார், ஒன்றியச் செயலர் சதீஷ்குமார், விவசாய சங்க கீரை ஒன்றிய செயலர் சிவராமன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டு பொங்கல் விழா, தமிழர்களின் பராம்பரிய கலைகள் குறித்துப் பேசினர். நிகழ்ச்சியில் சுபேந்திரன், மனோஜ், கரன், அஜித், ராகவேந்திரன், சாய்குமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.