சிதம்பரம் அருகே புதுப்பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் அறக்கட்டளை இணைந்து உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். சிதம்பரம் ரோட்டரி சங்கச் செயலர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் ரோட்டரி மண்டல துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி சுமார் ரூ.15,000 மதிப்பிலான புத்தக அலமாரிகளை பள்ளிக்கு வழங்கினார் .
பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.தேவி முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான கே. முனுசாமி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கினார். விழாவில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் வி.அழகப்பன், சோனா என்.என்.பாபு, பள்ளி ஆசிரியர்கள் எம். அன்புச்செழியன், சி.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.