விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து புதிய மாவட்டம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இதனையடுத்து, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விருத்தாசலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் ஆலய வளாகத்தில், வழக்குரைஞர் தங்க.தனவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் கோட்டத்தின் எந்தப் பகுதியையும் கள்ளக்குறிச்சி அல்லது வேறு மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துதல், கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் இயற்றுதல், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினரின் ஆதரவை பெறுதல், விருத்தாசலம் மாவட்ட கோரிக்கை போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் தொடங்குதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஜன. 22) பாலக்கரை ரவுண்டானாவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.