புதுவை கூட்டுறவுத் துறை இணையதளம் 7 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளதை அறிந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிருப்தி தெரிவித்தார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி அரசுத் துறைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியதாவது: புதுவை கூட்டுத் துறையின் கீழ் மொத்தம் 500 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டு ரூ. 27 கோடி ஒதுக்கப்படுகிறது. கூட்டுறவுத் துறை இணையதளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களுடன் உள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டைய தகவல்களே இப்போதும் உள்ளன. இந்த இணையதளத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
கூட்டுறவுத் துறை இணையதளம் நுழைவதில் சிரமம் உள்ளதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளேன். துறையானது எண்ம மயமாக்க (டிஜிட்டல்) வேண்டும். அத்துடன் அனைத்து தகவல்களையும் கணினி மயமாக்க வேண்டும். கூட்டுறவுத் துறை பதிவாளர் அனைத்து யூனிட்களையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
மேம்படுத்த திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்றார்
ஆளுநர் கிரண் பேடி.