விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் ஆலோசனை மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில், பேராசிரியர்கள் நடராஜன், பார்த்திபன், வேங்கலட்சுமி, பொற்கொடி, மருதாச்சலம் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய பயிர் ரகங்களை விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் பெற்று விவசாயிகளுக்கு அளித்து பயிரிடக் கூறுவது. புதிய தொழில்நுட்பங்களை அறிவியல் நிலையத்தின் ஆலோசனையுடன் செயல்படுத்துவது. வயல்வெளி பள்ளி பயிற்சியை அதிகளவில் நடத்துவது. வேளாண் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை கிராமங்கள்தோறும் நடத்துவது. பாரம்பரிய விளை பொருள்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தனி இடம் ஒதுக்குவது போன்ற ஆலோசனைகளை விவசாயிகள் வழங்கினர்.
இதை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞானிகள் உறுதியளித்தனர். நிகழ்வில், மன்ற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் 30 பேர் கலந்துகொண்டனர். விவசாயி குமரகுரு நன்றி கூறினார்.