கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
விருத்தாசலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் கி.சிவக்குமார் (50). தொழிலாளி. ஆலடி சாலை சக்தி நகரைச் சேர்ந்த கலைமணி மகன் கார்த்திகேயன் (30). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதில் முன்விரோதம் இருந்ததாம்.
சிவக்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் புதன்கிழமை மாலையில் பணிபூண்டார் தெரு அருகே மணிமுக்தாற்றங்கரையில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது சிவக்குமார், கார்த்திகேயன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தொடர்ந்து சிவக்குமாரை கார்த்திகேயன் கீழே தள்ளிவிட்டு, அவரது தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சிவக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவக்குமார் மகள் சிவரஞ்சனி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை வியாழக்கிழமை கைது செய்தனர்.