நகராட்சி மண்டல இயக்குநரை முற்றுகையிட்ட ஒப்பந்ததாரர்கள்

கடலூர் நகராட்சிக்கு வியாழக்கிழமை வந்திருந்த நகராட்சிகளின் மண்டல இயக்குநரை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர் நகராட்சிக்கு வியாழக்கிழமை வந்திருந்த நகராட்சிகளின் மண்டல இயக்குநரை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டனர்.
 நகராட்சிகளின் மண்டல இயக்குநர் இளங்கோவன் கடலூர் நகராட்சியில் மாதாந்திர ஆய்வுப் பணி மேற்கொள்ள வியாழக்கிழமை வந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஒப்பந்ததாரர்கள் அவரை முற்றுகையிட்டு, தங்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.7 கோடி பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தினர். அவர்களிடம் மண்டல இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது, ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறியதாவது: நகராட்சியில் குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி, தெருவிளக்கு பராமரிப்பு உள்பட 24 வகையான பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1.40 கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு மத்திய அரசின் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் பணம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
 அப்போது, மண்டல இயக்குநர் கூறியதாவது: மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடைவதால் வரி வசூல் பணிகள் சுறுசுறுப்படையும். எனவே, பாக்கித் தொகை வசூலிக்கப்பட்டு விரைவில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய-மாநில அரசுகளின் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் உடனடியாக வழங்கப்படுமென மண்டல இயக்குநர் கூறினார். இதை ஏற்று ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com