விருத்தாசலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலய திருத்தேர் பவனி விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர திருத்தேர் பவனி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, பங்குத் தந்தை அருள்தாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை பெரியநாயகி காட்சியளித்தார். வாணவேடிக்கை முழங்க பாளையக்காரர் பாலகோதண்டாயுதம் தேர் பவனியை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மட்டுமன்றி வெளி மாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.