வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் சாரண- சாரணீயர் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது.
முகாமுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். வடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.திருமுருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் கடலூர், வடலூர், சிதம்பரம், நெய்வேலி சாரண மாவட்டங்களைச் சேர்ந்த சாரண, சாரணீயர் ஆசிரியர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத் துணைத் தலைவர் வெ.ராமானுஜம், பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாம் தலைவர்களாக ஆர்.செந்தில்குமார், உஷாராணி ஆகியோர் செயல்படுகின்றனர். கடலூர் மாவட்டச் செயலர் ஜெ.செல்வநாதன், மாவட்டத் துணை ஆணையர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முகாம் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.