போலி மதுபானம் தயாரிப்பு: 4 பேர் கைது

கடலூர் மாவட்டம், வடலூரில் போலி மதுபானம் தயாரித்ததாக 4 பேர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், வடலூரில் போலி மதுபானம் தயாரித்ததாக 4 பேர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
 அரியலூர் மாவட்ட போலீஸார் அண்மையில் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவர் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினார். அந்த வாகனத்தை போலீஸார் சோதனை செய்ததில் போலி மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்ததாம். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கடலூர் மாவட்ட எல்லையோரத்தில் போலி மதுபானம் பதுக்கி வைத்திருந்த கிடங்கை கண்டுபிடித்து, அங்கிருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து போலி மதுப் புட்டிகள் வருவதாக தகவல் அளித்தனராம்.
 இதையடுத்து, திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்சேகர், விழுப்புரம் மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், கடலூர் கலால் பிரிவு ஆய்வாளர் லதா, வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் ஆகியோர் வடலூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வடலூரில் என்எல்சி அதிகாரிகள் நகரில் உள்ள என்எல்சி ஊழியர் சிட்டிபாபு என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்தது தெரியவந்ததாம்.
 இதையடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார் போலி மதுபானம் தயாரித்ததாக குறிஞ்சிப்பாடி வட்டம், வயலாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த குபேரன் (46), புதுச்சேரி தரசூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (40), கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் (42), போலி மதுபான வில்லைகள் தயாரித்து வழங்கிய புதுச்சேரி உப்பளத்தைச் சேர்ந்த ராஜ் என்ற ஆரோக்கியராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
 அந்த வீட்டில் 10 கேன்களில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம், 10 அட்டை பெட்டிகளில் வைத்திருந்த போலி மதுப் புட்டிகள், போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com