தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி 9-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூரில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணி கடலூர் அண்ணா பாலத்திலிருந்து புறப்பட்டு மஞ்சக்குப்பம் புனித. வளனார் கல்லூரியில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், நகராட்சி ஆணையர் க.பாலு, வட்டாட்சியர்கள் ப.பாலமுருகன் (தேர்தல்), பா.சத்யன் (கடலூர்), கல்லூரி முதல்வர் ஜீ.பீட்டர் ராஜேந்திரம், நாட்டு நலப்பணித் திட்ட ஒருகிணைப்பாளர்கள் சந்தனராஜ், எ.அன்னம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நெய்வேலி: நெய்வேலி ஜவஹர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில், 9-ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியில் துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு) எஸ்.ஆறுமுகம், நெய்வேலி நகரிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.விஸ்வநாதன், கல்லூரி முதல்வர் வி.ஜெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 153-ஆவது நெய்வேலி சட்டப் பேரவை தொகுதிச் செயல் அலுவலர் எஸ்.விநாயகமூர்த்தி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது. பேரணியில் சுமார் 200 மாணவர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் 50 பேர் பங்கேற்றனர். வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் கல்லூரியை அடைந்தது.