குடியரசு தின விழா கோலாகலம்: மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தேசியக்கொடியை

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியாவின் 70-ஆவது குடியரசு தின விழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எஸ்.விஜயகுமார் தலைமையில் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆயுதப் படை காவலர்கள், பயிற்சிக் காவலர்கள், தீயணைப்புத் துறையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண, சாரணீயர் இயக்கம், ஊர்க்காவல் படை, செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்பினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். 
பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சியர் கெளரவித்தார். தொடர்ந்து, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.26.28 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்து தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் பெற்ற 81 காவலர்களுக்கும், மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பான செயல்பட்ட போலீஸார், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முன்னாள் படைவீரர் நலம், மருத்துவம், சுகாதாரப் பணிகள், நகராட்சி, மகளிர் திட்டம், கல்வித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை உள்பட 17 துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக 261 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து, கடலூர் ஓயாசீஸ் சிறப்புப் பள்ளி, புனித.மேரி மகளிர் பள்ளி, அரசு குழந்தைகள் காப்பகம், ஏஆர்எல்எம் மெட்ரிக். பள்ளி, குளோபல் பள்ளி, தட்டாஞ்சாவடி புனித அன்னாள் பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி, பண்ருட்டி முத்தையர் பள்ளி, பி.முட்லூர் அட்சயாமந்திர் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர் கே.எம்.சரயு உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வட்டாட்சியர் ஜெ.ஜான்சிராணி தொகுத்து வழங்கினார். செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

கவனம் ஈர்த்த காவல் துறை
விழாவில் காவல் துறையினரின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மதுபோதையிலும், செல்லிடப்பேசி பேசிக்கொண்டும் வாகனம் இயக்குவது, சீட் பெல்ட், தலைக் கவசம் அணியாமல் வாகனம் இயக்குவது, அதிகவேகம், கூடுதல் பாரம், சாலையில் விளையாடிக் கொண்டு செல்வது ஆகியவற்றால் எவ்வாறு விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை காவலர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டி பாராட்டைப் பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com