கடலூர், விருத்தாசலம் நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துப்புரவுத் தொழிலாளர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேசியக்கொடி அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் ஏற்றுவர். இது அவர்களுக்கு அளிக்கப்படும் கெளரவமாகக் கருதப்படுகிறது. அந்த கெளரவத்தை கடலூர், விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்தினர் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கினர்.
கடலூர் நகராட்சியில் ஆணையர் (பொ) க.பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், துப்புரவுத் தொழிலாளி தனவள்ளி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு துப்புரவுத் தொழிலாளி செந்தமிழன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
இதேபோல, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் க.பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், துப்புரவுத் தொழிலாளி கொளஞ்சி தேசியக்கொடியேற்ற, தொழிலாளி அமாவாசை காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் க.பாலு கூறியதாவது:
நான் பொறுப்பு வகித்த அனைத்து நகராட்சிகளிலும் இதே நடைமுறையை கடைப்பிடித்து வருகிறேன்.
துப்புரவுத் தொழிலாளர்களும் முக்கியமானவர்கள்தான் என்பதை வலியுறுத்தவே, அவர்களை முதன்மைப்படுத்துவதாக அவர் கூறினார்.