சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 91 மாணவர்களுக்கு வள்ளலார், ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை சார்பில் ரூ. 4.55 லட்சம் பரிசுத் தொகையை துணைவேந்தர் வி.முருகேசன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கடந்த 1999-ம் ஆண்டு முதல் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளைகள் பெயரில் தமிழக அரசால் தலா ரூ.25 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையை கொண்டு பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் முதல் இரண்டு மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-19-ஆம் கல்வி ஆண்டில் அனைத்து துறைகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 91 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதன் தொடக்கமாக 25 மாணவ, மாணவிகளுக்கு அவரவரது வங்கி கணக்கில் தலா ரூ.5,000 செலுத்தப்பட்டது. அதற்கான சான்றிதழை துணைவேந்தர் வே.முருகேசன் மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கடின உழைப்பின் மூலம் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டுவதாகக் கூறினார். ஒருங்கிணைப்பாளர் அ. குளோரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பல்கலைக்கழக ஹெச் பிரிவு ஊழியர்கள் செய்திருந்தனர்.