படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு ரூ.15.8 கோடி நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தகவல் தெரிவித்தது.
கடலூர் மாவட்டத்தில் நல்லூர், வேப்பூர் வட்டங்களில் மக்காச்சோளம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனெனில், மக்காச்சோள கதிரின் உள்ளே அமெரிக்கன் படைப்புழுக்கள் நாசம் செய்தது தெரியவந்தது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த நோயின் தாக்கமானது தரமற்ற விதையை விநியோகம் செய்ததால் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வேளாண்மைத் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தப் பயிர்களுக்கு அரசு ஏக்கருக்கு ரூ.5,400 நிவாரணமாக அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.15.8 கோடி நிவாரணமாக வழங்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கிடைக்கப்பெற்றதும் விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.மாதவன் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு ரூ.5,400 நிவாரணமாக அறிவித்துள்ளது போதுமானதல்ல. ஏனெனில், மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குகின்றன. எனவே, நிவாரணத் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் அவர்.