திட்டக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூரைச் சேர்ந்த சபாபதி மகன் பரந்தாமன். இவர், மதுரையைச் சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக, பிணையில் வெளியில் வந்த பரந்தாமன், மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திட்டக்குடி பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திட்டக்குடி தொகுதிச் செயலர் வேலாயுதம் தலைமை வகித்தார். நகரச் செயலர் தனசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பரந்தாமனின் தந்தை சபாபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜாபிரபு, மணிகண்டன் ராஜா, மகேஷ், பாபு, சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.