பண்ருட்டி அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி ஒன்றியம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (35). இவர்களுக்கு 3 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (42). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அன்பழகனின் மனைவி தமிழரசிக்கும், ராஜேந்திரனுக்கும் கூடா நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவையில் சில ஆண்டுகள் வசித்து வந்தனராம். அண்மையில் இவர்கள் இருவரையும் குடும்பத்தார் மேல்மேட்டுக்குப்பத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி அன்பழகனுக்கு சொந்தமான முந்திரிக் காட்டில் தமிழரசி விஷம் குடிந்த நிலையில் இறந்து கிடந்தார். தமிழரசியின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது மகள் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தமிழரசி உயிரிழந்ததை அறிந்த ராஜேந்திரன் கடந்த 25-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
தமிழரசி தற்கொலை தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவரது கொழுந்தனார் பரசுராமன் (38) விஷம் குடிக்கக் கட்டாயப்படுத்தினாராம். அதன் பேரில், பரசுராமனை முத்தாண்டிக்குப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தார்.