தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் கடலூரில் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கியது. ஆனால், குடும்ப அட்டைகள் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள், முதியோர், விதவைகள் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலத் திட்டத்தின் கீழ் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவோருக்கு 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக, மஞ்சள் நிற அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அட்டைக்கு மற்ற மாவட்டங்களில் ரூ.ஆயிரம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கடலூர் மாவட்டத்திலும் இந்த அட்டை பெற்றுள்ள சுமார் 10 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் தலைமை வகித்தார். பொருளர் ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், 75 சதவீதத்துக்கும் மேலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. ஒன்றியத் தலைவர்கள் எம்.ஆறுமுகம், ஜெ.அமரேசன், தனுஷ்பத்மா, தில்லைநாயகம், மகளிரணி தலைவி சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.