ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கடலூரில் அனைத்து தொழில்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழில்சங்கங்கள் சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மு.சு.பொன்முடி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் பி.சி.எத்திராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், செயலர் பி.கருப்பையன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலர் வி.குளோப், என்பிடிஇ மாவட்டச் செயலர் ஆர்.ஸ்ரீதர், ஏஐயூடியூசி மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரா, பி.பாபு, சிஐடியூ நிர்வாகிகள் ஆர்.ஜீவானந்தம், வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரி, கடலூர் கேஎன்சி மகளிர் கல்லூரியிலும் சில மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.