வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.35 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, தமிழகத்தில் முதல் முறையாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையரின் உத்தரவுப்படி, வடலூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி வட்டம், தலைவன்கோட்டை, கோட்டூர்சாமி மகன் முத்துபாண்டி. இவர், வெளிநாட்டு பணிக்காக ஆள்களை அனுப்பி வருகிறாராம். இவரிடம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நாஞ்சலூர், பெரிய தெருவைச் சேர்ந்த சின்னப்பன் மகன் ஜெயபாண்டியன்(48) முகவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 15.7.2016 அன்று வடலூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த முத்துபாண்டியிடம், 29 நபர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக ரூ.4.35 லட்சத்தை ஜெயபாண்டியன் வழங்கினாராம்.
ஆனால், இதுவரை யாருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லையாம். கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
இதுதொடர்பாக, தவகல் அறியும் உரிமைச் சட்ட ஆணையத்தில் ஜெயபாண்டியன் முறையிட்டார். புகார் குறித்து விசாரித்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் உத்தரவின் பேரில், முதல் முறையாக வடலூர் காவல் நிலையத்தில் முத்துபாண்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் விசாரணை நடத்தி வருகிறார்.