பண்ருட்டி அருகே பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (44), பால் வியாபாரி. இவர், மகன் படிப்புக்காக, பண்ருட்டி லட்சுமிபதி நகரில் வீட்டை வாடகை எடுத்து தங்கியுள்ளார். இதனால், மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள வீடு பூட்டி இருக்குமாம். அந்த வீட்டின் பின் பகுதியில் பழனியப்பனின் தாய் வசித்து வருகிறாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 5 பவுன் தங்க நகைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். இதுகுறித்து பழனியப்பன் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.