2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திட்டக்குடியில் உரிய ஆவணமின்றி 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டக்குடி பெருமுளை சாலையில் திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபிக்ஷா, சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டபோது, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து அரிசி ஏற்றி வந்ததாக தெரிவித்தனர். ஆனால், அரிசி எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லையாம். இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸார், மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தயாள், சிறப்பு உதவி ஆய்வாளர்ர் விஜயன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து லாரியையும், அதிலிருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.