தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ரெளடி கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம், அண்ணாமலைநகர் வடக்கிருப்பு பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சாமிநாதன் (33). இவர், கடந்த மாதம் 9-ஆம் தேதி கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் அண்ணாமலைநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் சாமிநாதன் மீது அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அதற்கான உத்தரவை வழங்கியதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் கைது செய்யப்பட்ட சாமிநாதன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.