நெய்வேலியில் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திவிட்டு, அவரது பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி 5-ஆவது வட்டத்தைச் சேர்ந்த நரசிம்மன் மகன் மோனீஷ் (22). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில்நுட்பம் பயிற்சி பெற்று வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே பைக்கில் வந்த மோனீஷை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கினராம். இதில், கத்தியால் வெட்டப்பட்ட மோனீஷ், பைக்கை
அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி மறைந்தார். பின்னர், அந்தக் கும்பல் மோனீஷ் ஓட்டி வந்த பைக்கை தீயிட்டு எரித்துவிட்டுச் சென்றது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.