உப்பனாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவை வலியுறுத்தியது.
பேரவையின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மகளிரணி தலைவி என்.சிவபாக்கியம், மாநில மகளிரணிச் செயலர்கள் ஆர்.சுகுணா, எஸ்.பாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலர் எஸ்.கஜேந்திரன், கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார், சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.குருராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடலூர், திருப்பாதிரிபுலியூர் மீன் அங்காடியில் மீனவ பெண்களுக்கு ஓய்வு அறையாகவும், உணவுப் பொருள்கள் விற்பனையும் செய்யப்பட்டு வந்த கடை கடந்த 3 மாதங்களாக நகராட்சியால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக சீல் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வருகிற 15-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது.
சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய 3 கிராம மக்கள் வாழும் சுனாமி குடியிருப்பில் உயிரிழப்போரின் உடலை உப்பனாற்றில் இறங்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, உப்பனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளதால் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவர்கள் கே.சுப்புராயன், பி.மதியழகன், பொருளாளர் மாலைமணி, கொள்கை பரப்புச் செயலர் எம்.கந்தன், நகரத் தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டச் செயலர் பி.கோகிலன் வரவேற்க, இளைஞர் பேரவை மாவட்டத் தலைவர் சி.வீரமுத்து நன்றி கூறினார்.