கஞ்சா வியாபாரி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார்.
நெய்வேலி, மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் என்ற பெங்களூர் மணி (25). கஞ்சா வியாபாரியான இவர், அண்மையில் சமூக வலைதளத்தில் தனது குரல் பதிவை வெளியிட்டார். அதில், தான் பெரிய கஞ்சா வியாபாரி என்றும், போலீஸாரால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சவால் விடுத்தார். இதையடுத்து, இவரைப் பிடிக்க மந்தாரக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மணிகண்டனை அண்மையில் பிடித்த போலீஸாருக்கு அவர் கொலைமிரட்டல் விடுத்தாராம். எனினும், போலீஸார் அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்த விசாரணையில் மணிகண்டன் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதனடிப்படையில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடர்ந்து, மணிகண்டன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.